நள்ளிரவில் பெயர்ந்து விழுந்த வீட்டுக் கூரை: கூலித் தொழிலாளி படுகாயம் @ திருவாரூர்


திருவாரூர்: திருவாரூர் அருகே கனமழையால் வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கூலி தொழிலாளி காயமடைந்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம் மூணாம்சேத்தி கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளி சந்திரசேகரன் (40). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் 1996-ம் ஆண்டு அரசால் கட்டி கொடுக்கப்பட்ட தொகுப்பு வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். அந்த தொகுப்பு வீடு ஆங்காங்கே சேதமடைந்த நிலையில், அதை பணம் செலவழித்து செப்பனிட முடியாததால் சந்திரசேகரன் அதே வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் மன்னார்குடியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக, அதிகாலையில் இவரது வீட்டின் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்திரசேகரன் காயமடைந்தார்.

அதிர்ஷ்டவசமாக அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. வீட்டின் மேல் கூரை பெயர்ந்து விழுந்ததால் காயம்பட்ட சந்திரசேகர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

x