சங்க இலக்கியங்களை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும்: சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வேண்டுகோள்


ஈரோடு புத்தகத் திருவிழாவில், ‘அணிலாடு முன்றில்’ என்ற தலைப்பில், சிந்துவெளி ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் பேசினார். அருகில், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர்.

ஈரோடு: நிகழ்காலத்தை புரிந்து கொள்வதற்காகவும், வருங்காலத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவும், சங்க இலக்கியங்களை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும், என சிந்துவெளி ஆய்வாளரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் கூறினார்.

தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும், ஈரோடு புத்தகத் திருவிழா,சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. புத்தகத் திருவிழா சிந்தனை அரங்கில் நடந்த நிகழ்வில், ‘அணிலாடுமுன்றில்’ என்ற தலைப்பில், சிந்துவெளி ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான ஆர்.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

இந்தியாவில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்கள், வாழ்க்கையை பற்றி மட்டுமே பேசுகிற செவ்வியல்இலக்கியங்களாக உள்ளன. பொருளதிகாரம் என்ற பெயரில், வாழ்க்கைக்கு இலக்கணம் எழுதப்பட்ட நூல் சங்க இலக்கியங்கள் தான்.நாம் சங்க இலக்கியத்தை சரியாகவாசிக்கவில்லை. சங்க இலக்கியங்களை மக்கள் மீள் வாசிப்பு செய்ய வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவாக உள்ளது. இது கடந்த காலத்தின் பெருமையை பேசுவதற்காக அல்ல.

நிகழ்காலத்தை புரிந்து கொள்வதற்காகவும், வருங்காலத்தை காப்பாற்றிக்கொள்வதற்காகவும், சங்க இலக்கியங்களை மக்கள் மீள்வாசிப்பு செய்ய வேண்டும். நமக்கு இருக்கும் தொடர் மரபைதக்க வைத்துக்கொள்ள, கடந்த காலம் காப்பாற்றப்பட வேண்டும். இந்த புரிதல் இருந்தால், கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தையும் காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

‘அணையா விளக்கு’ என்ற தலைப்பில் ஞானாலயா பா.கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது: ஆழமான வாசிப்பும், தொடர்ந்துஅதைப் பற்றிய சிந்தனையும் தேடலும் அறிவை விசாலப்படுத்துகின்றன. மனதைப் பண்படுத்துகின்றன. மேலும் மனிதர்களை மனிதாபிமானம் கொண்டவர்களாக மாற்றுகின்றன. புத்தகங்களை படிப்பதன் மூலம் அறிவுப் புரட்சி ஏற்படுகிறது.

16 மொழி கற்றுத் தேர்ந்தவர் பாரதி. ஆனால், தமிழில்தான் எழுதவேண்டும், பேச வேண்டும் என்று இருந்ததோடு, அதற்காக பல செயல் திட்டங்களையும் வகுத்து செயல்படுத்தினார். அறிவியல் சொற்களை தமிழ்படுத்துவது முடியாது என ஒருவர் சொன்னபோது, மெல்லத் தமிழ் இனி சாகும் என சொன்னபோது, `எட்டுத்திக்கும் செல்வீர்' என்ற கவிதை எழுதினார் பாரதி. காசுக்காக பாரதி எதையுமே எழுதியதில்லை, எழுதியது எதையுமே காசாக்கவும் விரும்பியதில்லை.

சமகாலத்தில் வாழ்ந்த, தமிழ்ச்சமூகத்தை உலக அளவில் அடையாளப்படுத்திய, படைப்பாளிகள் வரலாற்றைக் கூட தமிழக மக்கள்அறிந்துகொள்ளவில்லை. படைப்பாளிகளை சமூகம் போற்றும் காலம் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், மக்கள் சிந்தனைப்பேரவைத் தலைவர் த.ஸ்டாலின்குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x