ஜெர்மனி விமானப் படை அதிகாரிகள் நீலகிரி மலை ரயிலில் பயணம்


மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு செல்வதற்காக நீலகிரி மலை ரயிலில் பயணித்த ஜெர்மனி விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் தலைமையிலான குழுவினர்.

கோவை: ஜெர்மனி விமானப்படை அதிகாரிகள் குழுவினர் இன்று நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்து, வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்றனர்.

"தாரங் சக்தி" என்ற பெயரில் முதல் முறையாக பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளின் விமானப் படைகளுடன் இணைந்து இந்தியா கூட்டு பயிற்சியை மேற்கொள்ள உள்ளது. இதில் முதல்கட்டமாக இந்தியா - ஜெர்மனி நாடுகளுக்கு இடையே முதல் முறையாக கோவை சூலூர் விமானப் படைத்தளத்தில் 8 நாள் கூட்டுப் போர் பயிற்சி கடந்த 6-ம் தேதி தொடங்கியது.

இந்திய விமானப்படை தலைமை தளபதி சவுத்ரி, ஜெர்மன் நாட்டு விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் ஆகியோர் தலைமையில் இந்தியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் 8 நாட்கள் கோவையில் தங்கி சூலூர் விமானப்படை தளத்தில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவுடன் கூட்டு விமான பயிற்சியில் பங்கேற்க வந்துள்ள ஜெர்மன் விமானப்படை தலைமை தளபதி இங்கோ கெர்ஹார்ட்ஸ் தலைமையில் 15 பேர் கொண்ட விமானப்படை உயரதிகாரிகள் கொண்ட குழுவினர் இன்று (ஆக.8) காலை 6 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தனர்.

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த மலை ரயில் தொடர்பான புகைப்பட கண்காட்சியை அவர்கள் பார்த்து ரசித்தனர். மேலும், இந்திய விமானப் படை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகளிடம் நீலகிரி மலை ரயிலின் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் ஜெர்மனி விமானப் படை வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சிறப்புப் பெட்டியில் நீலகிரி மலை ரயிலில் அவர்கள் பயணம் மேற்கொண்டனர்.

ஜெர்மன் விமானப்படை அதிகாரிகள், இந்திய விமானப்படை அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்தனர். மலை ரயிலில் குகைகளின் அழகையும், பசுமையும், அடர்ந்த வனப்பகுதியையும் கண்டு ரசித்தபடி அவர்கள் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்திற்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

x