பேரிடர்களை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர்: எம்.எஸ்.சுவாமிநாதன் குறித்து ஒடிசா துணை முதல்வர் புகழாரம்


சென்னை: ஒடிசா மாநிலத்தில் பேரிடரை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அம்மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தேவ் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், எம்.எஸ்.சுவாமிநாதனின் 99-வது பிறந்த நாளை ஒட்டி 'பசி இல்லாத உலகம்' என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலதுணை முதல்வர் கனக்வர்தன்சிங்தேவ் பங்கேற்று, அறக்கட்டளையின் இலச்சினையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியது:

ஒடிசா மாநிலம் எப்போதும் புயல், பெருவெள்ளம், வறட்சி எனபேரிடர்களால் பாதிக்கும் மாநிலமாக உள்ளது. இதனால் விவசாயம்கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஒடிசா மாநிலத்தில் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் வேளாண்மை திட்டங்களை வகுத்து செயல்படுத்த அறிவுறுத்தினார். அதை செயல்படுத்தியதன் மூலம் பேரிடர்களால் வேளாண்மையில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன. அவர் பேரிடரால் பாதிக்காத வகையில் சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துப்பயிர்கள் போன்றவற்றை பயிரிடஅறிவுறுத்தினார். இதன் மூலம் விவசாயிகள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. பிரதமர் மோடி நடப்பாண்டு பட்ஜெட்டில் வேளாண்மைக்கு 36 சதவீதம் அதிக நிதி ஒதுக்கி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ‘தி இந்து' குழும இயக்குநர் என்.ராம்,‘‘விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய அறிக்கையை மத்திய அரசு இதுவரை செயல்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. இதன்மூலம் மத்திய அரசு தனது கடமையை செய்ய தவறி இருக்கிறது’’ என்றார்.

தொடர்ந்து, நபார்டு வங்கியின் தலைவர் கே.வி.ஷாஜி, மீனவ பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயலியை வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, "மீன் பொருளாதாரம் மிகப்பெரியது. அதில் மகளிர் பங்கு அதிகம். அதைகருத்தில்கொண்டு, அவர்களுக்கென பிரத்தியேக செயலி உருவாக்கி இருப்பது வரவேற்கத்தக்கது" என்றார்.

கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா பேசும்போது, "உணவு உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்தாலும், விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படவில்லை. இதை உணர்ந்து சுவாமிநாதன், ‘விவசாயிகள் இல்லாவிட்டால் விவசாயம் இல்லை’ என்றார். அதனால் விவசாயிகள் மேம்பாட்டுக்காக சுவாமிநாதன் வாழ்நாள் முழுவதும் உழைத்தார்" என்றார்.

கடற்கரை தாவரங்களை காண்காணித்து பாதுகாக்கும் நீல கார்பன் திட்டத்தை தொடங்கிவைத்து அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, ‘‘இந்த அறக்கட்டளை பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வருகிறது’’ என்றார்.

அறக்கட்டளை தலைவர் சவுமியா சுவாமிநாதன் பேசும்போது, ‘‘விவசாயத்தையும், விவசாயிகளையும் தொழில்நுட்பத்தின் மூலம் மேம்படுத்தி 'பசி இல்லாத உலகம்' என்ற நிலையை அடைய முடியும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் நம்பினார். அவரது தொலைநோக்கு பார்வை, நிச்சயம் நிறைவேறும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை இயக்குநர் ஜி.என்.ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

x