ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின் எந்த முன்னேற்றமும் இல்லை... சிஐடியு சௌந்தரராஜன் விமர்சனம்!


முதல்வர் மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சியாக இருந்தபோது தொழிலாளர் நலனுக்காக தொழிலாளர்களுடன் இணைந்து போராடிய மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின், தொழிலாளர்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

சௌந்தரராஜன்

தமிழ்நாட்டில் பல்வேறு துறை சார்ந்த தொழிலாளர்கள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 9-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டியக்கம் சார்பில் கோட்டை முற்றுகை போராட்டம் உட்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

நகராட்சி ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பஞ்சாலை தொழிலாளர்கள், பஞ்சாலை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்படி பல்வேறு தரப்பினரும் மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன் மாநில அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தொழிலாளர்கள் போராட்டம்

"தற்போதைய முதல்வர் ஸ்டாலின் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தின்போது தொழிலாளர்கள் போராட்டங்களில் எங்களுடன் கலந்து கொண்டு போராடினார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பின்பும் தொழிலாளர்கள் நலனில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒப்பந்த முறையில் வேலைக்கு ஆட்களை வேலைக்கு எடுக்கக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்துள்ளது. இதுதான் இந்த அரசின் கொள்கையா?" என்று கேள்வி எழுப்பியிருக்கும் சௌந்தரராஜன், "தொழிலாளர்களின் பணம் பத்தாயிரம் கோடியை எடுத்து இந்த அரசு செலவு செய்துவிட்டது" என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சிஐடியு-வின் மாநில தலைவர் அரசுக்கு எதிராக இத்தகைய விமர்சனத்தை வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாகி இருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

x