பரபரப்பு… அதிமுக பிரமுகர் ஓட ஓட விரட்டி படுகொலை!


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அதிமுக பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விச்சூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் வைதேகியின் கணவர் சுமன், ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் மணல், எம்.சாண்ட், செங்கல், ஜல்லி சப்ளை செய்து வந்துள்ளார். அதிமுகவை சேர்ந்த இவர் சோழவரம் மேற்கு ஒன்றிய அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், திருவிழாவிற்கு பத்திரிகை எழுத வேண்டும் என்று கூறி நேற்று மாலை சிலர் சுமனை வீட்டில் இருந்து அழைத்து சென்றனர். ஊராட்சியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை தேக்க தொட்டியின் கீழ் சுமன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சுமனை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். அக்கம்பக்கத்தினர் சுமனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சுமனைப் பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய மணலி புதுநகர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீஸார் 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கோவில் திருவிழா தொடர்பாக சுமனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சரண் என்பவருக்கும், தகராறு ஏற்பட்டு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இருதரப்பினரும் சமாதானமாக சென்றனர்.

இந்நிலையில் மறுநாளான நேற்று கொலை அரங்கேறியுள்ளது. எனவே முன்பகையால் கொலை நடந்துள்ளதா அல்லது வேறு காரணமா என்று காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

x