திருமழிசை பேரூராட்சி தலைவர் தேர்தல்: திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி தேர்வு


மகாதேவன்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 6 வார்டுகளை அதிமுகவும், 6 வார்டுகளை திமுகவும் கைப்பற்றின. தலா ஒரு வார்டில் மதிமுக, பாமக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். இதையடுத்து, திமுகவைச் சேர்ந்த வடிவேலு பேரூராட்சி தலைவராகவும், மகாதேவன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த மே மாதம் பேரூராட்சி தலைவர் வடிவேல் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் துணைத் தலைவர் மகாதேவன் பொறுப்பு தலைவராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில், இன்று திருமழிசை பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பூந்தமல்லி வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் மேற்பார்வையில் பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான வெங்கடேசன் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தினார். இதில், திமுகவைச் சேர்ந்த மகாதேவன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அதிமுக கவுன்சிலர்கள் 5 பேர் மற்றும் ஒரு சுயேச்சை உள்பட 6 பேர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இதனால் திமுக மற்றும் மதிமுக கவுன்சிலர்கள் 6 பேர் மற்றும் 15வது வார்டு அதிமுக கவுன்சிலர் வேலு, 9வது வார்டு பாமக கவுன்சிலர் ராஜேஷ் ஆதரவுடன் திமுக வேட்பாளர் மகாதேவன் போட்டியின்றி பேரூராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

x