போக்சோ விழிப்புணர்வு காணொலிகளை பள்ளிகளில் திரையிட வேண்டும்: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு


பிரதிநிதித்துவப் படம்

சென்னை: போக்சோ சட்டம் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அது தொடர்பான காணொலிகளை அனைத்துப் பள்ளிகளிலும் திரையிட வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டம் கடந்த 2012-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம், குழந்தைகள் மீதான பாலியல் ரீதியான பேச்சு, செயல்பாடு, பார்வை உள்ளிட்ட துன்புறுத்தல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முடியும். போக்சோ சட்டம் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாநில அரசுகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: "தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் போக்சோ சட்டத்தினை எளிமையாக விளக்கும் வகையில் சில காணொலிகளை உருவாக்கியுள்ளது. அவை யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் முகவரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த காணொலிகளை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மத்தியில் திரையிட்டு போக்சோ சட்டம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

x