காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் மழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 577 கன அடி நீர்வரத்து


திருவள்ளூர்: திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவுமுதல், நேற்று காலைவரை பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 577 கன அடியாக இருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவுமுதல் நேற்று காலைவரை, மிதமான மழை பெய்தது. இம்மழையால், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முக்கிய ஏரிகளுக்கு மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று காலை நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 577 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அதே போல், பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 110 கன அடி, புழல் ஏரிக்கு விநாடிக்கு 68 கனஅடி, கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 15 கன அடி மழை நீர் வந்து கொண்டிருக்கிறது.

ஆகவே 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 1,441 மில்லியன் கன அடியாகவும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு, 83 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,513 மில்லியன் கன அடியாகவும், 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 303 மில்லியன் கன அடியாகவும் இருக்கிறது என, நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x