தமிழகத்தில் சென்னை உள்பட முக்கிய நகரங்களின் போக்குவரத்து நெரிசல் தீர்வுக்கான திட்டங்கள்: அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஆலோசனை


சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட பலமுக்கிய நகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தீர்ப்பதற்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேற்று ஆலோசனை செய்தனர்.

சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியசாலை, மேம்பாலத் திட்டங்கள் குறித்து, இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் பங் கேற்றனர்.

சென்னையில் நடக்கும் பணிகள்: சென்னையில் குறிப்பாக, தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 4 வழித்தட உயர்மட்டச் சாலை அமைத்தல். ராஜீவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளை இணைக்கும் இணைப்புச் சாலை, ராஜீவ்காந்தி சாலையில் டைடல் பூங்கா சந்திப்பில் நடைபெறும் ‘யு’ வடிவ மேம்பாலப் பணி, பெருங்களத்தூர் ரயில்வே மேம்பாலப்பணி, தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை, மத்திய கைலாஷ் சந்திப்பில் நடைபெறும் மேம்பாலப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் உதயநிதி கேட்டறிந்தார்.

தொடர்ந்து, சென்னை மாநகரில் செயல்படுத்தப்பட வேண்டிய தொலைநோக்கு திட்டங்களின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதில் குறிப்பாக, கலங்கரை விளக்கம் முதல் கொட்டிவாக்கம் வரை கடல்வழிப்பாலம், திருவான்மியூர் முதல்உத்தண்டி வரை உயர்மட்டச் சாலை, மீனம்பாக்கம் விமான நிலையம் முதல் தாம்பரம் வரை உயர்மட்டச் சாலை, பாடி முதல்திருநின்றவூர் வரை உள்ள சாலையில் ஐந்து சந்திப்புகளில் மேம்பாலம் அமைத்தல், பல்லாவரம் - சென்னை வெளிவட்டச்சாலையை இணைக்கும் உயர்மட்டச் சாலை, படப்பை – மணிமங்கலம் – வரதராஜபுரம் இடையிலான சாலையை இணைக்கும் புறவழிச்சாலை அமைத்தல் ஆகியவற்றின் சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்கப் பட்டது.

இதுதவிர, நகர்ப்புறங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தின் முக்கிய மாநகரங்களான மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், ஓசூர், வேலூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெறும் முக்கியமான பணிகளின் முன்னேற்றம் குறி்த்தும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னை எல்லைச் சாலை: இதற்கிடையே, சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களில் கையாளும் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால், சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ‘சென்னை எல்லைச் சாலை திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் முதல்கட்டப் பணிகள் எண்ணூர் துறைமுகம் முதல் தச்சூர் வரை 25.40 கி.மீ நீளத்துக்கு ரூ.4,290 கோடியிலும், 2-ம் கட்டப்பணிகள் தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை26.10 கி.மீ நீளத்துக்கு ரூ.2,259 கோடியிலும் நடைபெற்று வரு கிறது.

இப்பணிகள் குறித்து, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்நேற்று கள ஆய்வு மேற்கொண்டார் அப்போது, திட்டப்பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தி னார்.

இந்த ஆய்வுக்கூட்டம் மற்றும் கள ஆய்வில் அமைச்சர் எ.வ.வேலு.சிறப்பு திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஸ் அகமது, நெடுஞ்சாலைத் துறை செயலர் ஆர்.செல்வராஜ், சென்னை எல்லைச் சாலை திட்டத்தின் இயக்குநர் சி.அ.ராமன், திருவள்ளூர் ஆட்சியர் த.பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

x