கொலைக்களமான தமிழகம்: பழனிசாமி குற்றச்சாட்டு


சென்னை: திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறி இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப் பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலை ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை, போதை கும்பல் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பதற்கு இதுவே உதாரணம்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னை, கடலூர், நாகை, திருச்சி, கரூர், கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி என தமிழ்நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொலை செய்திகள் வெளிவருவது அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது. இதற்காக திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமும் நடைபெறும் கொலைகளால் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். சுற்றுலா துறை, தொழில் துறை அனைத்தும் பாதிக்கப்படும். மாநிலத்தின் வளர்ச்சிக்கு சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு முக்கியம் என்பதை அரசு உணர வேண்டும். எனவே, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இனியாவது தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்.

x