கல்வி கட்டணம் அந்தந்த ஆண்டிலேயே தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி


சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச சேர்க்கைக்கான கல்வி கட்டணம் அந்தந்த ஆண்டிலேயே விடுவிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் 10, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சிபெற்ற 4,043 தனியார் பள்ளிகளுக்கும் சர்வதேச, தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதுதவிர அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்கு உதவிய தனியார் பள்ளிகளின் தாளாளர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. இதன்படி சாதனை புரிந்த பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி அமைச்சர் உதயநிதி பேசியதாவது:

தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகள் அனைத்தும் அரசுப் பள்ளிகளிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்து, பார்த்து செய்து வருகிறார். தமிழகம் கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது. இதற்கு அரசின் நடவடிக்கைகளுக்கு தனியார் பள்ளிகள் வழங்கும் ஒத்துழைப்பும் காரணமாகும்.

மேலும், விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு அனைத்து விதத்திலும் உதவ தயாராகவே உள்ளது. மாணவர்கள் திறமைகளை வளர்த்து கொள்வதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அதேபோல், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இலவசமாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணமாக சுமார் ரூ.1,200 கோடியை பள்ளிகளுக்கு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இனிவரும் கல்வியாண்டுகளில் அந்தந்த ஆண்டிலேயே கட்டணம் விடுவிக்கப்படும்.

எனவே, அரசுப் பள்ளிகளின் வளர்ச்சி மட்டுமின்றி தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்துக்கும் தமிழக அரசு துணை நிற்கும். கல்வியை போலவே உடற்பயிற்சியும், விளையாட்டும் முக்கியம். நன்றாக விளையாடும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் நன்றாக படிப்பார்கள். எனவே விளையாட்டு பாடவேளையை மற்ற பாடங்களுக்காக ஆசிரியர்கள் கடன் வாங்க வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும் போது, “அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல தனியார் பள்ளியில் இருப்பவர்களும் நம் மாணவர்கள்தான். எனவே, இனி இந்த பாராட்டு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்” என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தயாநிதி மாறன் எம்.பி. தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி, இயக்குநர் ச.கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

x