17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: உள்துறை செயலர் உத்தரவு


சென்னை: தமிழகம் முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மாநகர காவல் ஆணையராக ரூபேஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக உள்துறை செயலர் தீரஜ் குமார் நேற்று பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவராக இருந்த டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் கடந்த 31-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அந்த பொறுப்பில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி சைலேஷ் குமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பொறுப்பை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. தினகரன் கூடுதலாக கவனிப்பார்.

பொதுப் பிரிவு ஐ.ஜி. செந்தில்குமார், மேற்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ஐ.ஜி. பவானீஸ்வரி பணியமைப்பு பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். அப்பொறுப்பில் இருந்த ருபேஷ் குமார் மீனா, திருநெல்வேலி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணைய ஐ.ஜி. மகேந்திர குமார் ரத்தோர், சமூக நீதி - மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த ஐ.ஜி. சாமூண்டீஸ்வரி, பொதுப் பிரிவு ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். குற்றப்பிரிவு ஐ.ஜி ராதிகா, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த பி.கே.செந்தில் குமாரி, குற்றப்பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். காவலர் நலன் பிரிவு ஐ.ஜி. நஜ்முல் ஹோடா, நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி காவல் ஆணையராக இருந்த பா.மூர்த்தி, திருநெல்வேலி சரக டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பிரவேஷ் குமார், சென்னை வடக்கு காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த அபிஷேக் தீக் ஷித், ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார், ராமநாதபுரம் சரக டிஐஜியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். அங்கிருந்த எம்.துரை, காவலர் நல டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து காவல் இணை ஆணையர் தேவராணி, வேலூர் சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அங்கிருந்த சரோஜ் குமார் தாக்கூர், சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

x