மாற்று திறனாளிகளுக்காக 58 தாழ்தள பேருந்துகள் சேவையை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்


சென்னையில் 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், தொ.மு.ச. பேரவை பொருளாளர் கி.நடராசன் உள்ளிட்டோர்.

சென்னை: சென்னையில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் 58 தாழ்தள பேருந்துகள் உள்ளிட்ட 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நேற்று தொடங்கி வைத்தார். மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 611 தாழ்தள பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் முதல் கட்டமாக 58 பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரப்பெற்றன. இதேபோல் 30 சாதாரண பிஎஸ் 6 ரக பேருந்துகள், 12 புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளும் இயக்கத்துக்கு தயாரானது. அதன்படி, ரூ.66.15 கோடி மதிப்பிலான 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோருடன் பேருந்துகளை பார்வையிட்டார். போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பிஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், தொமுச பேரவை பொருளாளர் கி.நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தாழ்தள பேருந்துகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் குறித்து மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: 35 சொகுசு இருக்கைகள் மாற்றுத் திறனாளிகள், முதியோர் உட்பட அனைவரும் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் பேருந்தின் தளம் 400 மிமீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இறங்கு தளத்தின் உயரத்தை மேலும் 60 மிமீ குறைத்து பயணிகள் ஏறிய பிறகு, பழைய உயரத்துக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் இடம்பெற்றுள்ளது. மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் ஏறி, இறங்குவதற்கு சாய்தள வசதியும், சக்கர நாற்காலியிலேயே அமர்ந்து பயணிக்க தனி இடவசதியும் உண்டு.

35 சொகுசு இருக்கைகள் உள்ளன: தானியங்கி கதவுகளை மூடினால் மட்டுமே பேருந்தை இயக்க முடியும். அடுத்த நிறுத்தத்தை முன்கூட்டியே அறிவிக்கும் ஒலிபெருக்கி மற்றும் எல்இடி திரை பொருத்தப்பட்டுள்ளது. இடவசதி அதிகமாக இருப்பதற்காக 12 மீட்டர் நீளமுடன், காற்றோட்ட வசதிக்காக அகலமான ஜன்னல்களுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் 100 புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி., மேயர் பிரியா, துறை செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குநர் செ.நடராஜன், தொ.மு.ச. பேரவை பொருளாளர் கி.நடராசன் உள்ளிட்டோர்.

x