கிண்டி சிறுவர் பூங்கா ரூ.30 கோடியில் புனரமைப்பு: திறந்துவைத்து பார்வையிட்ட முதல்வர்!


சென்னை கிண்டியில் புனரமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா பொதுமக்கள் பார்வையிட நேற்று திறக்கப்பட்டது. பார்வையாளர்களைக் கவரும் வகையில் நவீன நூலகம், செல்ஃபி பாயின்ட், வண்ணமயமான ஓவியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படங்கள்: எஸ்.சத்தியசீலன்.

சென்னை: கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்டு, ‘கிண்டி சிறுவர் இயற்கை பூங்கா’வாக பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தின் இயற்கை சூழலை பாதுகாக்கவும், வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கிலும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள செங்காந்தள் பூங்காவுக்கு அருகில் உள்ள 6.09 ஏக்கர் நிலத்தில் “கலைஞர் நூற்றாண்டு பூங்கா” மற்றும் கோயம்புத்தூர், காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவிலான செம்மொழிப் பூங்கா ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அங்கு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 2022 - 23ம் ஆண்டு பட்ஜெட்டில், கிண்டி சிறுவர் பூங்காவை மறு வடிவமைத்து, பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், விலங்குகள் உள்ளடங்கிய இயற்கைப் பூங்காவாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கிண்டி சிறுவர் பூங்காரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்டு சிறுவர்களுக்கு இயற்கை பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

தொடர்ந்து, வன விலங்குகளை மீட்கவும், வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ போன்ற விபத்துகளைத் தடுக்கவும், அனைத்து நிலப் பகுதிகளிலும் செல்லும் 9 நவீன வாகனங்களை முதல்வர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதன்பின், கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் வேடந்தாங்கல் பறவைகள் இருப்பிடத்தை திறந்து வைத்து, பூங்காவில்ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதி களைப் பார்வை யிட்டார்.

பல்வேறு வசதிகள்: தமிழகத்திலேயே முதன்முறையாக இந்தப் பூங்காவில் 2,800 சதுர மீட்டர் பரப்பளவில் மிகப்பெரிய நீர்வாழ் பறவைக் கூடம், வன உயிரின விழிப்புணர்வு மையம், விலங்குகள் மற்றும் பறவைகளின் விவரங்கள் அறிந்து கொள்ளும் வகையிலான எல்இடி மின் திரைகள், நூலகம், நிர்வாகக் கட்டிடம், அழகிய நுழைவு வாயில், நீருற்றுகள், செல்ஃபி பாயின்ட், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, மழைநீர் வடிகால் வசதிகள், நடைப் பாதைகள், சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், நவீன கட்டமைப்புடன் இரண்டு சிற்றுண்டி கூடங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள், புதிய கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட வாகனம் நிறுத்துமிடம் போன்றவசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், எம்.மதிவேந்தன், மேயர் ஆர்.பிரியா,தமிழச்சி தங்க பாண்டியன் எம்பி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, வனத்துறை செயலர் பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x