சென்னை - கோடம்பாக்கம் அருகே வங்கியில் தீ விபத்து


சென்னை: கோடம்பாக்கத்தில் வங்கி ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை கோடம்பாக்கம் லிபர்டி மேம்பாலத்தில் இருந்து வள்ளுவர் கோட்டம் செல்லும் சாலையில் உள்ள கட்டிட வளாகத்தின் தரைதளத்தில் பொதுத்துறை வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் உள் பகுதியில் இருந்து நேற்று காலை திடீரென கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தி.நகர் தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதற்கிடையில் வங்கியினுள் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. பின்னர், தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்து குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் வங்கியில் இருந்த ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

மேலும், வங்கியில் உள்ள முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவல் அறிந்து வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் சம்பவ இடத்தில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

x