மக்களின் போக்குவரத்து பாதிக்காதவாறு மழையால் சேதமாகும் சாலைகளை சரி செய்ய வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு


சென்னை: மழையால் சேதமாகும் சாலைகளை பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறின்றி உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மழைக் காலத்துக்கு முன்பாக நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும்சாலைகள், பாலங்களின் சீரமைப்பு பணிகள் குறித்து சென்னையில் நேற்று அமைச்சர்எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

மழைக்காலம் தொடங்கும் முன்னரே நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள், சாலைகள், பாலங்கள்ஆகியவற்றை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.

மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து அவற்றில் தங்கு தடையின்றி நீர் வெளியேற செய்ய வகை வேண்டும். மேலும்சாலைகளில் மழைநீரால் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை உடனடியாக சரிசெய்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நம்ம சாலை செயலி: ‘நம்ம சாலை செயலி’ என்றபுதிய திட்டம் நெடுஞ்சாலைத் துறையில் தொடங்கப்பட்டு, சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சரிசெய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பொறியாளர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சாலைப் பாதுகாப்புப் பணிகள், குறிப்பாக ‘ரோடு மார்கிங்’ உரிய தரத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டும். சென்னை மண்டலம் மற்றும் திருநெல்வேலியில் நடைபெற்று வரும் வெள்ள சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

போக்குவரத்து இடையூறாக உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மறுசீரமைப்பு பணிகளை உடனுக்குடன் முடித்து, ஒவ்வொரு பணிக்கும் தரக்கட்டுப்பாடு சான்றிதழ் பெற வேண்டும்.

அகலப்படுத்தும் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட சாலையில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை மாற்றியமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்துப் பணிகளுக்கும் பணப்பட்டுவாடா செய்யும் முன்தரக்கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலர்களைக் கொண்டு தரத்தை உறுதி செய்ய வேண்டும். தவறுகள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளமில்லாச் சாலைகளாகப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஒப்பந்ததாரருக்கு உள்ளது.

ஆய்வு மற்றும் பரிசோதனை: பாலப் பணிகளில் உரிய தள ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொண்டு, முறையான மதிப்பீடு தயாரிக்க வேண்டும். பணிகளில் முன்னேற்றம் இல்லாதபோது ஒப்பந்த விதிகளின்படி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில், நெடுஞசாலைத் துறை செயலர் ஆர்.செல்வராஜ், திட்ட இயக்குநர் எஸ்.ஏ.ராமன், சிறப்பு அலுவலர் (டெக்னிக்கல்) இரா.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x