கொடைக்கானல்: 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - ஒருவர் உயிரிழப்பு: ஒருவர் படுகாயம்


பழநி: கொடைக்கானலில் இருந்து பழநிக்குச் செல்லும் வழியில் சவரிக்காடு அருகே 300 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் செந்தில் (43), நந்தகுமார் (29). இருவரும் காரில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து விட்டு, நேற்று (ஆக.1) மாலை கொடைக்கானலில் இருந்து பழநிக்கு திரும்பியுள்ளனர். சவரிக்காடு அருகே மலைச்சாலையில் 7-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இது குறித்த தகவலறிந்த பழநி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, மலைவாழ் மக்கள் உதவியுடன் இன்று (ஆக.2) காலை பள்ளத்தில் இறங்கி கயிறு கட்டி கார் விழுந்த இடத்தில் கீழே இறங்கிப் பார்த்தனர். அப்போது, காரில் இருந்த செந்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயத்துடன் இருந்த நந்தகுமாரை மீட்டு பழநி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து கொடைக்கானல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x