மகளை ஒருதலையாக காதலித்தவரை கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!


மயிலாடுதுறை: தனது மகளை ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுத்த இளைஞரைக் கண்டித்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது அந்த இளைஞர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(59). திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன்(27) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் நேற்றிரவு கணேசன் வீட்டுக்குச் சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது கணேசன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியதில் கணேசன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தோர் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் இருந்தவர்கள் கலைவேந்தனை பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கலைவேந்தனை கைது செய்த போலீஸார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x