செல்போன் சார்ஜ் போடும்போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலி: குன்றத்தூரில் சோகம்


சென்னை: குன்றத்தூர் அருகே நேற்று இரவு செல்போனிற்கு சார்ஜ் போட்ட போது, மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் சுழிவலம், வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (29). இவர், கடந்த சில ஆண்டுகளாக சென்னை குன்றத்தூர், சுப்புலெட்சுமி நகர், ஒன்றிய காலனியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் மது போதையில் வீட்டிற்கு வந்த பாலமுருகன், தனது செல்போனுக்கு சார்ஜ் போட்டதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் சார்ஜரில் மின்கசிவு ஏற்பட்டு, பாலமுருகன் உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், அவர் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, பாலமுருகன் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக குன்றத்தூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், இறந்த பாலமுருகனின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் சார்ஜ் போடும் போது மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x