ஆணையர் பெயரில் போலி கையெழுத்து: விசாரணை கோரி அதிமுக வெளிநடப்பு


தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பெயரில் மோசடி நடந்ததை கண்டித்தும் மாநகராட்சியில் நாய்க்கடி தொடர்வதை கண்டித்தும் மன்ற கூட்டத்திலிருந்து நாய் பொம்மையுடன் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.படம்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையரின் கையெழுத்தைப் போட்டு மோசடி நடந்ததை கண்டித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தாம்பரம் மாநகராட்சி கூட்டம் மேயர் வசந்தகுமாரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், துணை மேயர்காமராஜ், ஆணையர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து 198 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக உறுப்பினர் அனைவரும் கருப்பு சட்டைஅணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பங்கேற்றனர். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அதிமுகவினர் ஆணையரின் கையெழுத்து போட்டு கட்டிட அனுமதி, தடையில்லா சான்று பெற்றுள்ளனர்.

இது குறித்து முறையான விசாரணை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பு செய்த அதிமுகவினர், நாய் தொல்லை அதிகமாக இருப்பதை உணர்த்தும் வகையில் நாய் பொம்மைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய படி வெளியேறினர்.

x