மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியை எட்டியது - ஆர்ப்பரிக்கும் காவிரி; மகிழ்ச்சியில் விவசாயிகள்!


சேலம்: மேட்டூர் அணை தனது முழு கொள்ளவான 120 அடியை இன்று மாலை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து 81,500 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால், கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு, நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. அப்போது, கடந்த 16ம் தேதி 43 அடியாக இருந்த நீர்மட்டம், அதன்பிறகு கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை இன்று மாலை 6 மணி அளவில் எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 43-வது தடவையாக, நீர்மட்டம் 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து தற்போது 16 கண் மதகு வழியாக, 60,000 கன அடியும், நீர் மின் நிலையம் வழியாக 21,500 கன அடி என மொத்தமாக காவிரி ஆற்றில் 81,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனிடையே, மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, சேலம் எம்பி செல்வகணபதி, சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்தின் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆகியோர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மேட்டூர் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி இன்று மாலை 4.30 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து, கால்வாய் பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார். கால்வாய் பாசனத்துக்கு தொடக்கத்தில், விநாடிக்கு 250 கன அடி திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அதிகரித்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வருவாய்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். மேட்டூர் அணையிலிருந்து காவிரி மற்றும் அதன் கிளை ஆறுகளில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

x