திருப்பூர் அரசு கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வெட்டிய குளம் மழைநீரால் நிரம்பியது


திருப்பூர்: ஜெய் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக, கல்லூரி வளாகத்தில் மழை நீர் சேமிப்பதற்காக என்.எஸ்.எஸ். குளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டது.

அந்தக் குளம் இப்போது மழை நீரால் நிரம்பி நிற்கிறது. இதுகுறித்து நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் நம்மிடம் பேசினார். “நிலத்தடி நீரை உயர்த்தும் வகையில், வீணாகிப் போகும் மழை நீரை சேமிப்பதற்காக அலகு -2 மாணவர்களை கொண்டு கல்லூரி வளாகத்தில் குளம் வெட்டப்பட்டது.

அதில் மழை நீரை சேகரித்து வருகிறோம். அதன் படி நேற்று (மே 19) இரவு பெய்த மழையால் குளம் நிரம்பி காணப்படுகிறது. இயற்கை நமக்கு கொடுத்த வரம் மழை நீர்” என்றார் மோகன்குமார்.

அவரைத் தொடந்து பேசிய கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், “தட்பவெப்ப நிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் பரவலாக எதிர்பாராத அளவு வெப்ப அலை அடித்தது. அதனால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால், இப்போது மழை பெய்ததால் மகிழ்ச்சியாக இருக்கிறது. கல்லூரியில் உள்ள மரங்களும் இனி செழிப்பாக காணப்படும்” என்றார்.

x