ஆம்னி பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம்: மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்


மதுரை: மதுரையில் டிக்கெட் முறைகேடு தொடர்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநர் மற்றும் கிளீனர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையத்தில் அண்மையில் தனியார் பேருந்து நிறுவனத்தில் பணிபுரிந்த ஓட்டுநர் மற்றும் கிளீனர் கட்டிவைத்து தாக்கப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிலரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தாக்கியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரியும் சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்கம் சார்பில் மதுரை புதூர் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான ஓட்டுநர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

x