ஈவிகேஎஸ் இளங்கோவனை விமர்சிக்க விரும்பவில்லை: கார்த்தி சிதம்பரம் கருத்து


கார்த்தி சிதம்பரம் | கோப்புப் படம்

தேவகோட்டை: சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம், தேவகோட்டையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

புதுக்கோட்டையிலும், சிவகங்கையிலும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நான் பேசியபோது, கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் இருந்தனர். அவர்கள் யாரும் எனது பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. நான் பேசியது தொடர்பாக ஒருவாரம் கழித்து ஈவிகேஎஸ். இளங்கோவன் விமர்சித்திருப்பது வியப்பாக உள்ளது. நான் என்ன பேசினேன் என்பதை அவர் முழுமையாகக் கேட்டாரா என்பதும் தெரியவில்லை. எனினும், நான் அவரை விமர்சனம் செய்ய விரும்பவில்லை.

நான் பேசியது சரியா, தவறா என்பதை கட்சித் தொண்டர்கள் முடிவு செய்வார்கள். மேலும், மேடையில் இருந்த தலைவர்களுக்கும் புரியும். எனது பேச்சுக்கு காங்கிரஸார் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கூட்டணி வேண்டாம் என்று நான் பேசவில்லை. கூட்டணியால் தான் வெற்றி பெற்றேன் என்றுதான் பேசினேன். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

x