அச்சிறுப்பாக்கம் முன்னாள் அதிமுக எம்எல்ஏ சி.கணேசன் காலமானார் - தலைவர்கள் இரங்கல்


செங்கல்பட்டு: அச்சிறுப்பாக்கம் தொகுதியின் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.கணேசன் வயது முதிர்வின் காரணமாக நேற்று காலமானார்.

செங்கல்பட்டு மாவட்ட மூத்த வழக்கறிஞரும், அச்சிறுப்பாக்கம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வுமான சி.கணேசன் வயது முதிர்வின் காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 87. அவரது உடல் அவரின் சொந்த ஊரான காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே வடக்குப்பட்டு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவருக்கு செங்கல்பட்டு நீதிமன்ற வழக்கறிஞர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கணேசனின் மனைவி வசந்தா சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

கணேசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, எம்ஜிஆர் தலைமையில் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் 1980ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அச்சிறுப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர், 1980 முதல் 84ம் ஆண்டு வரை எம்எல்ஏ-வாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

x