விளையாட்டு துறைக்கு ரூ.20 கோடி மட்டும் ஒதுக்கியது அநீதி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு


சென்னை: விளையாட்டுத் துறையில் தமிழகத்துக்கு வெறும் ரூ.20 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: கேலோ இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது முதல், ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த புள்ளிவிவரத்தை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கடந்த 7 ஆண்டுகளில் பாஜக ஆளும் உத்தர பிரதேசத்துக்கும், குஜராத்துக்கும் தலா ரூ.400 கோடி ஒதுக்கிய மத்தியஅரசு, தமிழகத்துக்கு வெறும் ரூ.20 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய அரசு ஓரவஞ்சனை: இந்த புள்ளிவிவரமே, ஓரவஞ்சனையின் மொத்த வடிவம்தான் மத்திய பாஜக அரசு என்பதற்கான சான்றாகும். உலக செஸ் போட்டி, ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப், தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப், கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள்,ஸ்குவாஸ் உலகக் கோப்பை என பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய அளவிலானப் போட்டிகளை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம்.

சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டுத் துறையின் முகமாகதமிழகம் மாறி வருகிறது. விளையாட்டுத் துறையில் இத்தனை ஆக்கப்பூர்வமாக செயல்படும் தமிழகத்துக்கு வெறும் ரூ.20கோடியை மட்டும் ஒதுக்கியிருப் பதை யாருமே ஏற்கமாட்டார்கள்.

இது தமிழக விளையாட்டு வீரர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும்அநீதி. தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து பாரபட்சம் காட்டும் பாஜகவின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வாக்களிக்காத மாநிலங்களுக்கு எதிரான மனநிலையை ஒன்றிய பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.

x