அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக பழனிசாமி அறிவுறுத்தல்


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 9 தொகுதியில் 3-ம் இடத்துக்கும் ஒரு தொகுதியில் 4-ம் இடத்துக்கும் சென்றது. இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து, மக்களவைத் தொகுதிவாரியாக கட்சி நிர்வாகிகளிடம், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி 2 கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதில் இரண்டாம் கட்டமாக, தென்காசி மற்றும் ஈரோடு ஆகிய மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

தென்காசி மக்களவைத் தொகுதி அதிமுக நிர்வாகிகள் பேசும்போது, இந்தத் தேர்தலில் நாம் பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. கூட்டணியும் பலமாக இல்லை. அதனால் அதிக வாக்குகளைப் பெற முடியவில்லை. எங்களால் முடிந்தவரை கூட்டணி கட்சி வேட்பாளருக்காக உழைத்தோம் என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் பேசிய பழனிசாமி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பலமான கூட்டணி அமையும். விரைவில் நடைபெற உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும். கட்சியில் அதிக அளவில் இளைஞர்களைச் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

x