முதல்வரோ அல்லது உதயநிதியோ கல்வராயன் மலைப்பகுதிக்கு சென்று பார்வையிட்டால் நல்லது நடக்கும்: நீதிபதிகள் கருத்து


சென்னை: தமிழக முதல்வரோ அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ துறை அமைச்சருடன் கல்வராயன் மலைப்பகுதிக்குச் சென்று பார்வையிட்டால் நல்லது நடக்கும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நடந்த கள்ளச்சாராய பலி சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி அறிக்கை தாக்கல் செய்தார். தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்கள், வசதிகள் குறித்து ஜூலை 26 (நாளை) அறிக்கை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.

அதையடுத்து நீதிபதிகள், “கள்ளச் சாராயம் தயாரிப்பது மட்டுமே அந்த பகுதி மக்களின் ஒரே வாழ்வாதாரமாக உள்ளது. அதனை ஒழிக்கும் பட்சத்தில் அப்பகுதி மக்களின் மறுவாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கல்வராயன் மலைப்பகுதி சுற்றுலாதலத்துக்கு உகந்த பகுதியாக உள்ளதால் அந்த பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், அந்த பகுதி மக்களுக்கு உடனடி தேவையான மருத்துவம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தமிழக அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். இதற்காக கல்வராயன் மலைப்பகுதிக்கு நாங்கள் செல்வதை விட, தமிழக முதல்வரோ அல்லது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினோ சம்பந்தப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சருடன் சென்று பார்வையிட்டால் அந்த பகுதி மக்களுக்கு ஏதேனும் நன்மை நடக்கும். ஒருவேளை முதல்வர் செல்ல முடியவில்லை என்றாலும் கூட, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்று பார்வையிடலாம்” என கருத்து தெரிவித்து, இந்த வழக்கை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

வழக்குகள் தள்ளிவைப்பு: இதேபோல கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய வழக்குகள் மீதான விசாரணை பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

அப்போது அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார். அதையடுத்து இறுதி விசாரணைக்காக வழக்கை ஆக.6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்

x