சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரங்களை பதிவு செய்ய உத்தரவு: ஆசிரியர்கள் அதிருப்தி


சென்னை: அரசுப் பள்ளிகளில் தினமும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை ஆசிரியர்கள் பள்ளிக் கல்வி செயலியில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வித் துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் என 90 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 44 லட்சம் மாணவ - மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் தினமும் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்விக்கான டி.என்.எஸ்.இ.டி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர், “பள்ளிகளில் ஆசிரியர்கள் ஏற்கெனவே கற்பித்தல் சாராத நிர்வாகப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களின் விவரங்களை செயலியில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது எங்களை மேலும் வேதனை அடையச் செய்திருக்கிறது. இது தவிர சத்துணவு சாப்பிட பெற்றோரிடம் படிவம் வழங்கி ஒப்புதல் பெறவும் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். ஆசிரியர்களை கற்பித்தல் தவிர வேறு பணிகளில் ஈடுபடுத்துவது மாணவர்களின் நலனை பாதிக்கும் என உயர் நீதிமன்றம் ஓரிரு நாள்களுக்கு முன்புதான் அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் ஆசிரியர்களின் பணிச்சுமையை மேலும் அதிகரிப்பதையே கல்வித்துறை குறிக்கோளாக கொண்டுள்ளது. எனவே, இதுபோன்ற கல்வி சாராத பணிகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்குவதை கல்வித்துறை கைவிட வேண்டும்” என்றனர்.

x