ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது


ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப் பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த 74 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் 8 விசைப்படகுகள், 4 நாட்டுப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இப்படி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரும் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 மீனவர்கள், ஓராண்டு, 2 ஆண்டு மற்றும் 6 மாதம் சிறைத் தண்டனை பெற்று சிறையில் வாடி வருகின்றனர்..

கடந்த 7 ஆண்டுகளில் 170-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வைத்துள்ளது. இதை கண்டித்து அண்மையில் தமிழக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் 9 மீனவர்களை இலங்கை கடற்படை தற்போது கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டியதாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேரை கைது செய்தனர். அவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் தொடர்க கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கடும் அச்சத்திலும், கொந்தளிப்பிலும் உள்ளனர்.

x