விழுப்புரத்தில் ஒரே நிகழ்வில் 1000 மல்லர் கம்ப வீரர்கள் பங்கேற்று உலக சாதனை!


தமிழகத்தில் மல்லர் கம்பம் விளையாட்டை பிரபலப்படுத்திய உலகதுரையின் 85வது பிறந்த நாளையொட்டி நேற்று விழுப்புரத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் மல்லர் கம்பம் வீரர்கள் பங்கேற்கும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சி திடல் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மல்லர் கம்ப கழக துணைத்தலைவர் சின்ராஜ் தலைமை வகித்தார். விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல மேலாளர் சுஜாதா, ஒலிம்பிக் சங்க இணைசெயலாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மல்லர் கம்பம் கழகத்தின் புரவலர் பொன்.கௌதமசிகாமணி நிகழ்வை தொடங்கி வைத்தார். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மல்லர் கம்ப வீரர்கள் ஒரே நேரத்தில் 100 கம்பங்களில் ஏறி, 15 நிமிடங்களில் உலக சாதனை நிகழ்வை நிகழ்த்தினர். இன்ஜினியர்ஸ் சார்ம் உலக சாதனை அமைப்பு நிர்வாகி ஆனந்த ராஜேந்திரன், மக்லின் ஜான்வசந்த் ஆகியோர் நடுவர்களாக இருந்து நிகழ்வை பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து மல்லர் கம்பம் கழக நிறுவனர் உலகதுரை ஏற்புரையாற்றினார். மல்லர் கம்பம் கழகத்தின் சிறப்பு தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், தெலங்கானா மாநில மல்லர் கம்பம் கழகத்தின் செயலர் திலிப்காவானே, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x