விலை குறையாத தக்காளி: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்பனை


சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடந்த ஒரு வாரமாக குறையாமல் உச்சத்திலேயே உள்ளது. இன்று (ஜூலை 21) கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு சந்தைக்கு ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வருகிறது. குறிப்பாக ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி, தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களில் இருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.

கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வெயில் மற்றும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை உச்சத்தில் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோ ரூ.70 வரை உயர்ந்தது, வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.90 வரை உயர்ந்து இருந்தது. இன்றைய நிலவரப்படி கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. வெளிச் சந்தைகளில் ரூ.80-க்கு விற்கப்பட்டது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான கேரட் ரூ.80, முருங்கைக்காய் ரூ.60, சாம்பார் வெங்காயம் ரூ.45, அவரைக்காய் ரூ.40, கத்தரிக்காய், பச்சைமிளகாய் தலா ரூ.30, பீன்ஸ், பாகற்காய் தலா ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.29, முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.20, முட்டைக்கோஸ், புடலங்காய், நூக்கல் தலா ரூ.15, வெண்டைக்காய் ரூ.10 என விற்கப்பட்டு வருகிறது.

தக்காளி விலை உச்சத்திலேயே இருப்பதற்கான காரணம் குறித்து கோயம்பேடு சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ''ஆந்திரா, கர்நாடக எல்லையோர மாநிலங்களில் தக்காளி உற்பத்தி குறைந்துள்ளது. ஆந்திரா, கேரள மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், அப்பகுதிகளில் குறைந்த அளவில் உற்பத்தியான தக்காளியும் சந்தைக்கு வரவில்லை. இதனால், அப்பகுதி வியாபாரிகளும் கர்நாடக, ஆந்திர எல்லையோர பகுதிகளில் தக்காளி வாங்கிச் செல்கின்றனர். இதனால் கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து, அதன் விலை உச்சத்திலேயே உள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை தான் நீடிக்கும்'' என்றனர்.

x