பொதுப்பிரச்சினைகள் குறித்து சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு மனு அனுப்பலாம்: ராமநாதபுரம் ஆட்சியர் தகவல்


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. விஷ்ணு சந்திரன் | கோப்புப் படம்.

ராமேசுவரம்: சட்டப்பேரவை மனுக்கள் குழுவிற்கு பொதுப்பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் மனு அனுப்பலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மனுக்கள் குழு ராமநாதபுரம் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்சினைகள், குறைகள் குறித்து மனுதாரர், தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு ஆக.8-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மனுக்கள் ஒரு பிரச்சினையை உள்ளடக்கியதாகவும் ஒரு துறையைச் சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சினைகள் குறித்ததாக மனுக்கள் இருக்கலாம்.

அதேநேரத்தில் மனுவில் உள்ள பொருள் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கில் உள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழில்கடன் வேண்டுதல், அரசு பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் போன்ற பொருள் குறித்த மனுக்களாக இருத்தல் கூடாது.

சட்டமன்ற பேரவை விதிகளிலும் வரம்புக்கும் உட்பட்ட மனுக்களை மனுக்கள் குழு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

x