டிச.6-ல் முருக பக்தர்களின் இரண்டாவது மாநாடு: இந்து மக்கள் கட்சித் தலைவர் தகவல்


கும்பகோணம்: வரும் டிச.6-ல் முருக பக்தர்களின் 2-வது மாநாடு நடைபெற உள்ளது என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் வட்டம், சுவாமிமலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் முருக பக்தர்களின் சூரசம்ஹாரம் மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. சுவாமி மலையில் காலை நடைபெற்ற கருத்தரங்கிற்கு, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''இந்து அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் இந்து சமய மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது. பழனியில் நடைபெறும் முருக பக்த மாநாட்டிற்கு, குழப்பமான கருத்துக்களை தெரிவித்து வரும் மாநாட்டு பொறுப்பாளரான சுகி சிவம் போன்றவர்களுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

இதே போல் அண்மைக் காலமாக முருகக் கடவுளை தொடர்ந்து அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் போன்றவற்றை பாட புத்தகங்களில் இடம்பெற செய்ய வேண்டும். முருகனின் ஆறுபடை வீடுகளை திருப்பதிக்கு நிகராக மேம்படுத்த வேண்டும். மேலும், கோயில்களில் பக்தர்களிடம் கட்டணங்களை வசூலிப்பதை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, வரும் டிச.6-ம் தேதி முருக பக்தர்களின் 2-வது மாநாட்டை நடத்த உள்ளோம்.

அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட பிறகு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது. தமிழகத்தில் சிலர் பட்டியலின மக்களை தவறாக பயன்படுத்தி, அவர்களை இந்துக்களிடமிருந்து பிரிக்கும் சூழ்ச்சியை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் மற்றும் அந்த கட்சியினர் பட்டியலின மக்களை தவறாக வழிநடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

மேலும், மின்கட்டண உயர்வை வன்மையாக கண்டிப்பதோடு, விரைவில் அந்த மின் கட்டண உயர்வைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளம். அண்மைக் காலமாகத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக கெட்டுவிட்டது. தமிழக ஆளுநர் இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வழங்க வேண்டும். மத்திய அரசு குழு அமைத்து, தலையிட வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கருத்தரங்குக்கு மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி முன்னிலை வகித்தார்.

சொக்கபுர ஆதீனம் ஸ்ரீகாரியம் தம்புரான் சுவாமிகள், இலங்கை மருங்குளம் சச்சிதானந்தம், இந்து மக்கள் கட்சி சித்தர் பேரவை அண்ணாமலை சித்தர், நடிகர்கள் கஞ்சா கருப்பு, வையாபுரி, திரைப்பட இயக்குனர் மோகன் ஜி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். தொடர்ந்து மாலை சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில சுற்றி காவடி கிரிவலமும், இரவு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

x