மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்கு


தயாநிதி மாறன் | கோப்புப் படம்

சென்னை: மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தயாநிதிமாறன், 2 லட்சத்து 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தயாநிதி மாறன் வெற்றியை எதிர்த்து, அத்தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தேர்தல் பிரச்சாரம், ஏப்.17-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தயாநிதி மாறன் சார்பில் வாக்குப் பதிவு நாளான ஏப்.19-ம் தேதி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடப்பட்டு, பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இது ஜனநாயக முறைப்படியான தேர்தலில் வாக்காளர்களை திசை திரும்பும் செயல் மட்டுமின்றி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிரானது. மேலும், அவர் தனது தேர்தல் பிரச்சார செலவு, விளம்பர செலவு, பூத் ஏஜெண்ட்களுக்கு செலவிட்ட தொகையை முறையாக தெரிவிக்கவில்லை.

தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ரூ.95 லட்சத்தை விட அதிகப்படியான தொகையை செலவிட்டுள்ளார். குறிப்பாக, மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும், ஜனநாயக முறைப்படியும் நடக்கவில்லை என்பதால், இந்த தொகுதியில் தயாநிதிமாறன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

x