இடஒதுக்கீடு கோரி பெரிய அளவில் போராட்டம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்


விழுப்புரம்: வன்னியர் சங்கத்தின் 45-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, தைலாபுரம் தோட்டத்தில் நேற்று சங்க கொடியை பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்றிவைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1980 ஜூலை 20-ம் தேதி வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டபோது, சாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கு 20 சதவீதம், பட்டியல் இன மக்களுக்கு 22 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்தியதால், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை கடந்த அதிமுக அரசு வழங்கியது.

அதை உறுதிப்படுத்த வேண்டுமென்று திமுக அரசிடம் பலமுறை வலியுறுத்தியும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இடஒதுக்கீட்டுக்காக தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்குப் போராட்டம் நடத்தினால்தான், இந்த அரசு பணியும் என்று நம்புகிறோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் வன்னியர் சங்கம், பாமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

x