வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உடனடி உதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு


முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வங்கதேசத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வங்கதேசத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக தமிழர்கள் சிலர் தாயகம் திரும்ப இயலாமல் அங்கு சிக்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. வங்கதேசத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அங்கு உள்ள இந்தியர்களின் பாதுகாப்பைக் கருதி, உள்ளூர் பயணங்களைத் தவிர்க்கவும், நடமாட்டத்தைக் குறைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் விரைந்து வழங்கிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் அங்குள்ள இந்தியத் தூதரகம் மற்றும் தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டுள்ளது. அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளைச் செய்ய தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.

வங்கதேசத்தில் உள்ள தமிழர்களின் குடும்ப உறுப்பினர்கள், தங்களுக்கு உதவி தேவைப்பட்டால், தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா உதவி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்தியாவுக்குள் - 91 1800 309 3793. வெளிநாடு - 91 80 6900 9900. தொடர்புக்கு - 91 80 6900 9901 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x