முக்கூர்த்தி தேசிய பூங்காவில் ‘ரேடியோ காலர்’ பொருத்தப்பட்ட வரையாடு மரணம்!


முக்கூர்த்தி தேசிய பூங்காவில், ‘ரேடியோ காலர்’ பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நீலகிரி வரையாடு, மாமிச உண்ணி தாக்கி உயிரிழந்தது.

தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட முக்கூர்த்தி தேசிய பூங்கா, ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இவை அதிகளவில் உள்ளன. இவற்றை அழிவில் இருந்து பாதுகாக்க மாநில அரசு 2022ம் ஆண்டு முதல் நீலகிரி வரையாடுகள் பாதுகாப்புத் திட்டத்தை ரூ.25.14 கோடியில் செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம், வரையாடுகள் குறித்து ஆய்வு செய்தல், ‘ரேடியோ காலர்’ பொருத்தி அவற்றைக் கண்காணித்தல், அச்சுறுத்தலை போக்குதல், நோய் கண்டறிதல், அவற்றின் வாழ்விடமான புல்வெளிகளை மீட்டெடுத்தல், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், முக்கூர்த்தி தேசிய பூங்காவில், உலகலாவிய வனவிலங்குகளுக்கான நிதியம், தனியார் அமைப்பு மூலம் மே மாதம் ஆண் வரையாடு ஒன்றுக்கு, ‘ரேடியோ காலர்’ பொருத்தி, கண்காணித்து வந்தது. இந்த ஆடு 17ம் தேதி, புவியியல் குறியீடு இணையதளம் வழியாக கண்காணிக்கப்பட்ட போது நடமாட்டம் ஏதும் இல்லாமல் இருந்தது தெரிய வந்தது.

வனசரகர் யுவராஜ்குமார் தலைமையில் வன ஊழியர்கள், கடைசியாக ‘ரேடியோ காலர்’ சிக்னல் கிடைத்த இடத்தை நேற்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது சோலை வனப்பகுதியில் நீரோடை அருகே, ‘ரேடியோ காலர்’ பொருத்தப்பட்ட வரையாடு இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரையாட்டின் உடலைப் பிரேத பரிசோதனை செய்தார். பிரேத பரிசோதனையில் மாமிசம் உண்ணி தாக்கி வரையாடு இறந்திருப்பதாக தெரிய வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

x