மீன்பிடி தடை காலத்தால் மீன்கள் விலை அதிகரிப்பு


சென்னை: ஆழ்கடலில் மீன்களின் இனப் பெருக்கத்துக்காக திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை பகுதியில் ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜுன் 14 வரை 61 நாட்களுக்கு விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கியது.

கட்டுமரம், பைபர் படகுகள், வள்ளம் உள்ளிட்ட நாட்டு படகுகள் மூலம் மீனவர்கள் அண்மை கடல் பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். இதில் குறைந்த அளவு மீன்களே கிடைத்தது. இதனால், காசிமேட்டில் மீன்களின் விலை அதிகரித்தது.

கவளை, நெத்திலி, சங்கரா ஆகிய மீன்கள் கிலோவுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. வஞ்சிரம், வவ்வால் உள்ளிட்ட பெரிய வகை மீன்கள் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை அதிகரித்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், மீன்கள் விலையை வியாபாரிகள் சிலர் மேலும் அதிகரித்து விற்பனை செய்தனர்.

x