திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நல்லம்மன் கோயிலுக்குச் செல்ல போலீஸார் தடை


திருப்பூர்: நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் நல்லம்மன் தடுப்பணையில் வெள்ளம் அதிகரித்து நல்லம்மன் கோயிலுக்குச் செல்லும் சிறு பாலம் மூழ்கி கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் அடுத்த மங்கலம் அருகே நொய்யல் ஆற்றில் நல்லம்மன் தடுப்பணை உள்ளது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட இந்த அணைக்காக நல்லம்மாள் என்ற சிறுமி உயிர்த்தியாகம் செய்ததாக செவிவழிச்செய்தி உண்டு. இதையடுத்து நல்லம்மனுக்கு அணை நடுவில் கோயில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

கோவை, நீலகிரி மாவட்டங்களை ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் புது வெள்ளம் வரத்துவங்கியுள்ளது. மங்கலம் அருகே உள்ள நல்லம்மன் தடுப்பணையை புது வெள்ளம் கடந்து வரும் நிலையில், அணைக்கு நடுவே உள்ள கோயிலுக்குச் செல்லும் சிறு பாலம் இன்று நீரில் மூழ்கியது.

இதனால் நல்லம்மன் கோயிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கோயிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. இன்னும் நீரின் அளவு அதிகரித்தால் கோயிலே மூழ்கும் நிலை ஏற்படலாம். வெள்ளம் காரணமாக, நல்லம்மன் கோயிலுக்குச் செல்ல பொதுமக்களுக்கு போலீஸார் தடை விதித்துள்ளனர். மேலும் அப்பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் போலீஸார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

x