நாமக்கல் ராசிபுரத்தில் முழு கடையடைப்பு போராட்டம்!


நாமக்கல்: ராசிபுரத்தில் புதிய பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதை கண்டித்து இன்று கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், நகரப் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் நகரின் மையப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பேருந்து நிலையத்தை ராசிபுரம் அருகே நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய அணைப்பாளையத்திற்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இதற்கு ராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்கள் சங்கம், அரசியல் கட்சியினர் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேலும், ராசிபுரம் நகர பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புதிய பேருந்து நிலைய திட்டத்தை கைவிட வலியுறுத்தி மனு அளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ராசிபுரம் நகரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என நகரப் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வணிகர் சங்கத்தினர் தங்களது கடைகளை அடைத்து புதிய பேருந்து நிலைய இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராசிபுரம் நகராட்சிக்குட்பட்ட கடைவீதி, பழைய பேருந்து நிலையம் மற்றும் தற்போதைய பேருந்து நிலைய பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் இப்பகுதிகளில் நாள் முழுவதும் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்படும். வணிகர் சங்க கடையடைப்பு போராட்டத்தால் இந்த பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. தவிர பொதுமக்களின் அன்றாட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மருந்துக் கடைகள் மற்றும் பால் விற்பனை நிலையங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து பேசிய ராசிபுரம் நகர புதிய பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பினர், “ராசிபுரத்தில் தற்போது உள்ள புதிய பேருந்து நிலையம் நகரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் அணைப்பாளையம் என்ற இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. இதனால் நகர மக்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் பாதிப்புக்கு உள்ளாவர். எனவே இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி முதற்கட்டமாக ராசிபுரம் நகரப் பகுதியில் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. அடுத்த கட்டமாக வரும் 23ம் தேதி பேருந்து நிலையம் அருகில் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும். இத்திட்டத்தை கைவிடும் வரை போராட்டங்கள் தொடரும்” என்றனர்.

x