ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் கைவிட வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


சென்னை: ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே மதுவைகொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை கைவிட வேண்டும் என்று பாமகநிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக நேற்றுஅவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பீர், ஒயின், மணமூட்டப்பட்ட மதுவகைகள் போன்ற குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மது வகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோகநிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்கதமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக வும், அதன் சாதக பாதகங்கள் குறித்து ஆன்லைன் விநியோகநிறுவனங்கள், மது உற்பத்தி யாளர்கள் போன்றோருடன் கலந்தாய்வு செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வீடுகளுக்கே சென்று மது விற்கதிட்டமிடப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஒருவேளை இந்த செய்தி உண்மையாக இருந்தால் தமிழக அரசின் திட்டம் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

போதை குறைந்த மது வீடுகளுக்கே நேரடியாக விநியோகிக்கப்பட்டால், அது வீடுகளில் உள்ளகுழந்தைகளையும், பெண்களையும் சுவைத்துப் பார்க்கத் தூண்டும். காலப்போக்கில் வீட்டில் உள்ள பெண்களையும், பிள்ளைகளையும் மதுவுக்கு அடிமையாக்கவே இது வழிகோலும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே குடிக்கும் முறைக்கு முடிவுகட்டி குடும்பமே மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கவே வீடு தேடி மதுவை கொண்டு சென்று கொடுக்கும் திட்டம் வழிவகுக்கும்.

போராட்டம் நடத்தப்படும்: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுப்பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக்கூடாது. மது வகைகளை ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம்இருந்தால் அதை தமிழக அரசுகைவிட வேண்டும். இல்லாவிட்டால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.

டாஸ்மாக் மறுப்பு: இதற்கிடையே, ‘வீடுகளுக்கே மது விநியோகம் உள்ளிட்ட எந்த புதிய முயற்சியும் இல்லை. டெட்ராபாக்கெட் எனப்படும் காகிதக் குடுவையில் மது அறிமுகம் செய்யும் திட்டமும் இல்லை’ என்று டாஸ்மாக் நிர்வாகம் மறுத்துள்ளது.

x