சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி தரப்பில் 2 புதிய மனு தாக்கல்: அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு


சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் வங்கியின் கவரிங்லெட்டர் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் பெற்றுக்கொண்ட செந்தில் பாலாஜி, அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராயக்கோருவது உட்பட 2 புதிய மனுக்களை தாக்கல் செய்தார். இதன்மீது அமலாக்கத் துறை பதிலளிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர்சிட்டி யூனியன் வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க உத்தரவிடக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: இந்த வழக்கை விசாரித்த முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி, அந்த வங்கியின் கவரிங்லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜிக்கு வழங்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த ஆவணங்களை பெறுவதற்காக நீதிபதி எஸ்.அல்லி முன்பாக நேற்று செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.

பின்னர் ஆவணங்களை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். இதையடுத்து அவரின் நீதிமன்ற காவலை 18-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இந்நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனு மீது நேற்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி எஸ்.அல்லி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

உண்மைத் தன்மை: இந்நிலையில், இந்த வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்க வேண்டும் என்றும், வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறை சோதனைக்கு அனுப்பி உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்றும் செந்தில் பாலாஜி தரப்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுகுறித்து பதிலளிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, விசாரணையை வரும்18-ம் தேதிக்கு தள்ளிவைத் துள்ளார்.

x