இருசக்கர வாகனம் மோதியதில் நீலகிரி நீதிபதி உயிரிழப்பு


சாலை விபத்தில் உயிரிழந்த நீதிபதி கருணாநிதி

பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தை சேர்ந்தவர் கருணாநிதி (58). நீலகிரி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று சொந்தவேலை காரணமாக சின்னாம்பாளையம் வந்த நீதிபதி கருணாநிதி, மதியம் பொள்ளாச்சி-உடுமலை சாலையோரம் காரை நிறுத்திவிட்டு, எதிரில் உள்ள மளிகை கடைக்கு சாலையைக் கடந்து செல்ல முயன்றார்.

எதிர்பாராதவிதமாக, பொள்ளாச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனம் நீதிபதி கருணாநிதி மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய இருசக்கர வாகன ஓட்டுநர், வாகனத்தை நிறுத்தாமல் அங்கிருந்து தப்பிச் சென்றார். விபத்து குறித்து தகவலறிந்த பொள்ளாச்சி கிழக்கு போலீஸார், நீதிபதியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, நீதிபதி மீது மோதிய இருசக்கர வாகனஓட்டியைத் தேடி வருகின்றனர்.

x