காவிரி விவகாரம் குறித்து அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டம்


கோப்புப்படம்

சென்னை: தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்ய அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்து கட்சி சட்டப்பேரவை தலைவர்கள் கூட்டம் நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 பிப்ரவரி 5-ம் தேதி அளித்த இறுதி உத்தரவு, உச்ச நீதிமன்றம் 2018 பிப்ரவரி 16-ம் தேதி வழங்கிய தீர்ப்பு ஆகியவற்றை செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுஆகியவற்றை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, 2018 ஜூன் முதல் இந்த அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு கடந்த ஆண்டில் விடுவிக்கவில்லை. இதனால், தமிழக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழக அரசு நீரை பெற்றது.

தற்போதைய தென்மேற்கு பருவமழை காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள், தமிழகத்துக்கு பிலிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரை கணக்கிட்டு, ஜூலை 12 முதல் 31-ம் தேதி வரை தினமும் ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நீரை திறக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கர்நாடகாவின் இந்த செயல், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகும்.

இன்றைய அளவில் கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டிஎம்சி ஆகும். மேலும், இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவுக்கு மட்டுமே நீர் உள்ளது. இந்த சூழலில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் உத்தரவுப்படி, வரையறுக்கப்பட்ட நீரை கர்நாடகா தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்.

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகவிவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது.

காவிரி நீரை பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜூலை 16-ம் தேதி (இன்று) காலை11 மணிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்ட உத்தரவிட்டுள்ளேன். இக்கூட்டத்தில், அனைவரையும் கலந்துபேசி, சட்ட வல்லுநர்களின் கருத்துகளை பெற்று, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்.

x