அரசு மருத்துவமனைகளில் அடையாளம் தெரியாத பிரேதங்களை தகனம் செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தேங்கிக் கிடக்கும் அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத பிரேதங்களை உள்ளாட்சி அமைப்புகளின் மின் தகன மேடைகளில் இலவசமாக தகனம் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஜீவாத்மா கைங்கரிய தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலரான எம்.வி.ரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2020-ம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளின் பிணவறைகளில் உரிமை கோரப்படாத மற்றும் அடையாளம் தெரியாத உடல்கள் அதிகளவில் தேங்கி வருகிறது. இதனால் இறந்தவர்களின் அழுகிய உடல்கள் துர் நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் நிலையில் அவசரம், அவசரமாக புதைக்கப்படுகிறது.

சில உடல்கள் மருத்துவ பயன்பாட்டுக்காக கொண்டு செல்லப்படுவதாகக் கூறிதவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் ஒவ்வொரு உடலும் அரசியலமைப்பு சட்ட ரீதியாக கண்ணியமான முறையில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு அடக்கமோ, தகனமோ மேற்கொள்ளப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது.

எங்களைப் போன்ற தனியார் தொண்டு நிறுவனங்கள் மனிதாபிமானத்துடன் இதுபோன்ற உடல்களை அடக்கம் செய்ய முன்வந்தாலும் அதற்கான செலவுத் தொகையை தமிழக அரசு முறையாக வழங்குவதில்லை. எங்களது அறக்கட்டளை சார்பில் இதுவரை ஏராளமான அடையாளம் தெரியாத பிரேதங்களுக்கு இறுதி மரியாதை செலுத்தி நல்லடக்கம் செய்துள்ளோம்.

எனவே அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை உரிய சட்ட விதிகளை பின்பற்றி மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான குற்ற ஆவண காப்பகத்தில்அங்க அடையாளங்களைப் பதிவு செய்த பிறகு அந்த உடல்களை புதைக்காமல் மாநகராட்சிக்கு சொந்தமான மின் தகன மேடைகளில் இலவசமாக தகனம் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். தமிழகம் முழுவதும் இதே நடைமுறையை பின்பற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார். அதையேற்ற நீதிபதிகள், விசாரணையை ஆக.1-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

x