இளம் வழக்கறிஞர்களுக்கு ரூ.20 ஆயிரம் உதவித்தொகை: பார் கவுன்சில் வேண்டுகோள்


பி.எஸ்.அமல்ராஜ் | கோப்புப் படம்

சென்னை: இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வழங்குவது தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரியைச் சேர்ந்த இளம் வழக்கறிஞரான ஃபரிதா பேகம் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில், "சென்னை, மதுரை, கோவை ஆகிய பெருநகரங்களில் வழக்கறிஞர்கள் அல்லது மூத்த வழக்கறிஞர்களிடம் ஜூனியராகப் பணிபுரியும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.20 ஆயிரம், தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித் தொகையாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் 4 வாரங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பித்து அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: வழக்கறிஞர்களின் நலன் காக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த உத்தரவு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துவழக்கறிஞர்கள் சங்கங்களின்பார்வைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இளம் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான மதிப்பையும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையும் கூட. எனவே ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகமும் பிரகாசிக்க இளம்வழக்கறிஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அனைத்து வழக்கறிஞர்களும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x