“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்கது” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளதுஎன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு மகத்தான, மாபெரும் வெற்றியை வழங்கிய விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது என்ற நூறு விழுக்காடு வெற்றியை திமுக தலைமையிலான 'இண்டியா' கூட்டணி பெற்றது. பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியைப் பெற்றோம். அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்தது. பாஜக கூட்டணி பாதாளத்தில் விழுந்தது.

திமுகவின் வெற்றி வேட்பாளராக அன்னியூர் சிவாவை அறிவித்தோம். மக்களவைத் தேர்தல் படுதோல்வியில் எழ முடியாமல் இருந்த அதிமுக படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறோம் என்பதை உணர்ந்து போட்டியில் இருந்து பின்வாங்கியது.

பாஜக தனது அணியில் இருக்கும் பாமகவை நிறுத்தியது. 'இடைத்தேர்தலில் நிற்பதே இல்லை' என்று வைராக்கியமாக இருந்த பாமக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்த மர்மம் இன்னமும் விலகவில்லை.

அவதூறுகளையும், பொய்களையும் திமுக மீதும் குறிப்பாக என் மீதும் விதைத்து, தங்களது 100 சதவீத தோல்வியை மறைப்பதற்காக மிகக் கீழ்த்தரமான பரப்புரையை பாஜக அணி செய்தது. அவர்களின் பரப்புரையை, மக்கள் மதிக்கவே இல்லை.

தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திமுக என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொன்ன விக்கிரவாண்டி வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

திமுக வேட்பாளர் வெற்றிபெற உழைத்த அமைச்சர்கள், கட்சிநிர்வாகிகள், இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.

இதேநேரத்தில் இந்தியா முழுமைக்கும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற 13 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. பாஜக தோல்வியைத் தழுவி இருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறாத கட்சிதான் பாஜக. சில கட்சிகளின் தயவால் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. அத்தகைய தோல்வி முகமே பாஜகவுக்கு இந்த இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. மாநில உணர்வுகளை மதிக்காமல் ஆட்சியையும் கட்சியையும் நடத்த முடியாது என்பதை பாஜக இனியாவது உணர வேண்டும்.

திமுக வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்க வெற்றியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றியும் அமைந்துள்ளது. இந்த வெற்றியானது எங்களுக்கு மாபெரும் உற்சாகத்தையும், எழுச்சியையும், அதேசமயத்தில் கூடுதல் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது.

அரசின் சாதனைகளுக்கு மகுடம்சூட்டுவதாக, சாதனை வெற்றியாக இது அமைந்துள்ளது. நாங்கள்எங்களது சாதனைப் பயணத்தையும், வெற்றிப் பயணத்தையும் தொடர்கிறோம். மக்களோடு இருக்கிறோம். மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.

x