`பாஜக ஆட்சியில் ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர்'- ஜெயராம் ரமேஷ் குற்றச்சாட்டு


"பாஜக ஆட்சியில் செல்வந்தர்கள் செல்வந்தர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர்" என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.

இந்திய ஒற்றுமை பயணத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், 21-வது நாளான இன்று தமிழகத்தில் மீண்டும் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார். கேரள மாநில எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம், கூடலூரில் பாதயாத்திரையை மாலையில் தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், "பாஜக ஆட்சியில் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. நீட் போன்ற பிரச்சினைகளால் குறிப்பாக மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. மதம், மொழி, உணவு, உடை போன்ற பல்வேறு தனிமனித உரிமைகளில் பாஜகவினர் கலவரத்தை உருவாக்கி வருகின்றனர். பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலை இல்லாமை, ஜிஎஸ்டி போன்ற பிரச்சினைகளால் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். செல்வந்தர்கள் செல்வந்தர்களாகவும், ஏழைகள் ஏழைகளாகவே உள்ளனர். பாஜக மக்களிடையே பல்வேறு பாகுபாடுகளை புகுத்தி வருகிறது.

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மூலம் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் 3 நாட்கள், கேரளாவில் 16 நாட்கள் ஒற்றுமை நடைப்பயணம் முடிந்த நிலையில் நாளை (செப்டம்பர் 30) காலை கர்நாடக மாநிலத்தில் 8 மணிக்கு இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்குகிறார். கர்நாடகாவில் 21 நாட்கள் ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் நடைபெற உள்ளது. தேயிலைக்கு நிரந்தர விலை ஏற்படுத்தி தர தேயிலை விவசாயிகள் ராகுல் காந்தியின் நேரில் மனு அளித்துள்ளனர்" என்றார்.

x